இந்திய
தலைப்புச் செய்திகள்-நவம்பர் 11மலேசியாவில் இன்று வெளியாகியுள்ள ஆங்கில, மலாய்,தமிழ்,சீன நாளிதழ்களின் முக்கிய செய்திகளும் தலையங்கமும்.
முகப்புச் செய்திகள்
ஆங்கில நாளிதழ்கள்
நியு ஸ்ட்ரேய்ட்ஸ் டைம்ஸ், அம்னோ மகளிர் பிரிவில் தலைமைத்துவ மாற்றம் ஏற்கனவே திட்டமிட்டபடி 2009 ஜூனில் நிகழும் என்பதை முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.
த ஸ்டாரில், இந்திய முஸ்லிம், மற்றும் இந்திய உணவக உரிமையாளர்கள் உணவுவிலையைக் குறைத்திருப்பது முதன்மைச் செய்தி.
மலாய் நாளேடுகள்
உத்துசான் மலேசியா, பெரித்தா ஹரியான் இரண்டிலும் அம்னோ மகளிர் தலைமைத்துவ மாற்றத் திட்டத்தில் மாற்றமில்லை என்பது முதல்பக்க செய்தி.
தமிழ் நாளேடுகள்
மலேசிய நண்பனில், நடப்பு மஇகா தலைவர் ச.சாமிவேலுவை மூத்த தலைவர் எம்.முத்துப்பழநியப்பன் எதிர்த்துப் போட்டியிடலாம் என்ற செய்தி முதல் பக்கத்தில் வெளிவந்துள்ளது.
தமிழ் நேசனில், தமீழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறுத்தப்போவதில்லை என்று இலங்கை அரசு அறிவித்திருப்பது முதன்மைச் செய்தி.
மக்கள் ஓசை, ஊழியர் சேமநிதி சந்தாதொகையில் மூன்று விழுக்காடு குறைப்பது ஊழியர்களுக்கு நன்மை பயக்காது என்று தேசிய தோட்டத்தொழிலாளர் சங்க தலைமைச் செயலாளர் ஜி.சங்கரன் கூறியிருப்பது முதல் பக்கச் செய்தி.
சீன நாளேடுகள்
ஒரியெண்டல் டெய்லியில் நியு இரா கல்லூரி விவகாரத்தில் அரசாங்கம் தலையிடலாகாது என்று சீனர் சமூகம் கேட்டுக்கொண்டிருப்பது முதல் பக்கத்தில் வெளிவந்துள்ளது.
நன்யாங் சியாங் பாவ், தெனாகா நேசனல், மின்சாரக் கட்டணத்தைத் திருத்தி அமைக்கும் என்பது முதன்மைச் செய்தி.
சின் சியு டெய்லியிலும் சைனா பிரஸிலும் பினாங்கில் கார் விற்பனை மையம் ஒன்று கொளுத்தப்பட்டதில் அதன் உரிமையாளர் இறந்தார் என்பதும் எட்டு ஆடம்பரக் கார்களைக் கொள்ளையர் ஓட்டிசென்றனர் என்பதும் முதல் பக்கச் செய்தியாகும்.
தலையங்கம்
நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ்: 21 ஆண்டுகளுக்குப் பிறகு அம்னோ துணைத் தலைவர் பதவிக்குப் போட்டி இருக்கும். கட்சியின் ஒற்றுமைக்கும் நிலைத்தன்மைக்கும் உதவக்கூடிய தலைவரைப் பேராளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உத்துசான் மலேசியா: மலாய்க்காரர்-அல்லாதார் பிரதமராக வேண்டுமானால் அவர்கள் கூட்டரசு அரசமைப்பை மதிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும். உண்மையான மலேசிய இனத்தை உருவாக்க மலாய்க்காரர்-அல்லாதார் ஒன்று கலக்க வேண்டும்.
பெரித்தா ஹரியான்: அம்னோவில் உயர்ப் பதவிகளுக்குப் பலர் போட்டியிடுவது கட்சிக்குள் ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு சான்றாகும்.
மலேசிய நண்பன்: இந்திய சமூகம் தனது பங்குடமையை அதிகரிக்க கடுமையாக பாடுபட வேண்டும்.
தமிழ் நேசன்: நாட்டில் குற்றச்செயல்களைக் குறைக்க போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் ஓசை: முன்னாள் குற்றவாளிகள் புதுவாழ்வு தொடங்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
சின் சியு டெய்லி: மாட் ரெம்பிட் விவகாரத்துக்கு போலிஸ், விவேகமான முறையில் தீர்வு காண வேண்டும்.
